டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் என உறுதிப்படுத்தப்படும் வரை அனைத்து காய்ச்சலாளர்களும் நுளம்புகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஊடாக மற்றுமொருவருக்கு நுளம்பின் மூலம் தொற்று ஏற்படக்கூடும் என்பதால் அனைத்து காய்ச்சலாளர்களும் நுளம்புகளிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டுமென குழுவின் தலைவரான சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய டெங்கு நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென சுகாதார இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
டெங்கு கட்டுப்பாட்டு நிபுணர் குழு இன்று கூடிய போது சுகாதார இராஜாங்க அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் வைத்தியசாலைகள் தொடர்பாக டெங்கு தடுப்புக்கான தனி வழிகாட்டுதல்களை தயாரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் வைத்தியசாலைகளில் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் ஒதுக்கப்பட்ட இடங்களில் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, பாடசாலைகள், வழிபாட்டுத் தலங்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் கைவிடப்பட்ட காணிகளை டெங்கு நுளம்புகள் அதிகம் பெருகும் இடங்கள் என கருதி வாரத்தில் ஐந்து நாட்களை ஒதுக்கி ஆய்வு செய்யுமாறும் அவர் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் கைகால்களை மறைக்கும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிவதற்கு சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதுடன், பெற்றோருக்கு எவ்வித மேலதிகச் செலவும் இன்றி மேற்கொள்ளப்பட வேண்டுமென கலந்துரையாடப்பட்டது.