32 வருடங்களுக்குப் பிறகு இணையும் அமிதாப்-ரஜனி கூட்டணி!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – இயக்குநர் டி.ஜே.ஞானவேல் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்தி்ல் ஹிந்தி திரைத்துறையின் முன்னிணி நடிகர் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ரஜினிகாந்த நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது.

இந்தப் படத்தில், பல மொழி திரைத்துறைகளில் இருந்து முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையடுத்து, மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகிவரும் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடித்துவருகிறார்.

இதற்கடுத்து, ரஜினியின் 170ஆவது திரைப்படமாக லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்தையே ‘ஜெய் பீம்’ பட இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கவுள்ளார்.

இந்தப் படத்தின் தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ள நிலையில், படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு அர்ஜுன், விக்ரம் ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன.

இதைத் தொடர்ந்து, அமிதாப் பச்சன் நடிக்கும் தகவல் வந்துள்ளதுடன், ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் அவர் நடிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே, ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் ஹம் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படம் வெளியாகி 32 வருடங்களின் பின்னர் இருவரும் மீண்டும் இணையும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.

எனவே, அமிதாப் பச்சன் இந்தப் படத்தில் நடிக்கவிருப்பது உறுதியானால் படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

எதிர்வரும் ஓகஸ்ட் 11ஆம் திகதி ‘ஜெயிலர்’ வெளியீட்டைத் தொடர்ந்து ‘தலைவர்-170’ திரைப்படத்தின் படப்பிடிப்புப் பணிகள் அம்மாதமே தொடங்கவுள்ளமை குறிப்பிடக்கூடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *