IPL பணமழைக்கு பலியாகும் வீரர்கள் கேள்விக்குறியாகும் உலக கிரிக்கெட்!

உலக கிரிக்கெட்டையே கபளீகரம் செய்யப்போகிறதா ஐபிஎல்? – பெருகும் அச்சம்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் அணி உரிமையாளர்கள் வேறு பல நாடுகளிலும் தங்கள் உரிமைதாரர் வலையைத் தனியார் டி20 கிரிக்கெட்டின் மீது விரித்திருப்பதாலும் பல நாடுகளின் வீரர்களை ஐபிஎல் மட்டுமல்லாது மற்ற நாட்டு டி20 கிரிக்கெட்டில் தங்கள் அணிகளில் ஆட ஒப்பந்தம் பேசும் விதமாக முறைசாரா பேச்சு நடத்தி வருவதாக விளையாட்டு சார்ந்த செய்திகளை வெளியிட்டு வரும் இணையதளம் ஒன்று தகவல் ளியிட்டுள்ளது.

இதனையடுத்து, உலக கிரிக்கெட்டை ஐபிஎல் அணிகள் கபளீகரம் செய்கிறதா என்ற விவதங்கள் எழுந்துள்ளன. முன்னணி கிரிக்கெட் நாடுகளிலிருந்து வீரர்கள் ஐபிஎல் உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே முன்னணி சர்வதேச வீரர்களின் பணி நியமனஸ்தர் அந்தந்த நாட்டு வாரியம் அல்ல, மாறாக ஐபிஎல் உரிமையாளர்களே இந்த வீரர்களின் உரிமையாளர்களாகி விடுவார்கள் என்று கூறுகிறது அந்த செய்தி.

ஐபிஎல் உரிமையாளர்கள் தென் ஆப்பிரிக்கா டி20 லீக், யுஏஇ டி20 லீக் என்று கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருகின்றனர். இதனையடுத்து ஐபிஎல் மட்டுமல்லாது பிற லீகுகளிலும் தங்கள் அணிக்காக ஆட அயல்நாட்டு முன்னணி வீரர்களை வாங்கிப் போடும் வேலையில் ஐபிஎல் உரிமையாளர்கள் ஈடுபட்டிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான பேச்சு இங்கிலாந்தில் மட்டுமல்ல ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாட்டு வீரர்களுடன் நடைபெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைமைச் செயல் அதிகாரி ஹீத் மில்ஸ் கூறுகிறார்.

“பல தனியார் கிரிக்கெட் தொடர்களில் ஆடுவதற்கு பிற நாட்டு வீரர்களை ஒப்பந்திக்கும் இந்த பேச்சுவார்த்தை முறைசாரா விதத்தில் நடைபெற்றுள்ளது” என்கிறார் ஹீத் மில்ஸ். ஆனால் இந்த முயற்சி எந்த அளவுக்கு முழுமையாக வளர்ச்சியுறும் என்று தெரியாது.

அதாவது, சமீபமாக நியூஸிலாந்து இடது கை வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் நாட்டுக்காக ஆடும் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி முழுவதும் தனியார் கிரிக்கெட்டையே பிரதானமாக ஆடி வருகிறார். இப்போது ஐபிஎல் தன்னை கிரிக்கெட் உலகின் பிதாமகனாக்கிக் கொண்டால் இதே போல் உலகின் முன்னணி டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் தனியார் கிரிக்கெட்டின் பணமழைக்கு பலியாகிவிடுவார்கள் என்ற அச்சம் எழுகின்றது.

எந்த ஒரு தனிப்பட்ட வீரரும் இதுவரை ஒப்பந்திக்கப்படவில்லை எனினும் இது ஒரு நடைமுறை என்று ஆகும் போது டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு பேராபத்தாக முடியும் என்றும். இருதரப்புக்கு இடையிலான கிரிக்கெட்டே காலியாகி விடும் என்றும் இப்போதே கவலை எழுந்துள்ளது. ஆகவே பிசிசிஐ-யின் ஆதிக்கத்தையும், அதன் செல்லப்பிள்ளையான ஐபிஎல் கிரிக்கெட்டையும் பொதுவாகவே தனியார் ஃப்ரான்ச்சைஸ் கிரிக்கெட்டையும் கட்டுப்படுத்த ஐசிசி புதிய விதிமுறைகளைக் கொண்டு வருவது நலம் என்று கிரிக்கெட் அக்கறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *