அமெரிக்க டொலருக்குப் போட்டியாக வருகிறது புதிய நாணயம்!

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் அமைப்பின் நாடுகள், வர்த்தகத்தை எளிதாக்கும் வகையில் புதிய நாணயத்தை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தென்னாபிரிக்காவில் நடைபெறும் தமது வருடாந்த மாநாட்டில் புதிய நிதி உடன்படிக்கை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

ரஷ்ய உக்ரைன் யுத்தம் காரணமாக ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதார தடைகளினால் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கும் ரஷ்யா இந்த புதிய நிதிப் பிரிவை உருவாக்கியதன் பின்னணியில் இருப்பதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, ரஷ்ய – உக்ரைன் மோதலால் பொருளாதார தடைக்கு உள்ளான ரஷ்யா, அமெரிக்க டொலருக்கு பதிலாக சீனாவின் யுவான் நாணயத்தை பயன்படுத்தி வர்த்தகம் செய்து வருவதாக புளூம்பெர்க் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வாரம் மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, சீன நாணயத்தின் ஊடாக ​​ரஷ்யா, ஆசிய நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுடனான கொடுக்கல் வாங்கல்கள் செய்ய தேவையான ஆதரவை வழங்குவதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான வர்த்தக பெறுமதி தோராயமாக 190 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டதுடன் ரஷ்ய மற்றும் சீன நாணயங்களில் பணம் செலுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *