முட்டாள் ஒருவர் கிடைத்தவுடன் பதவி விலகுவதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!
டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவிக்கு மாற்றாக ஒருவரைக் கண்டறிந்ததும் அந்த பதவியில் இருந்து விலகுவதாகக் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எனினும், நிறுவனத்தின் சில முக்கிய பிரிவுகளை தொடர்ந்தும் இயக்குவார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து டுவிட்டரில் பதிவொன்றை விடுத்துள்ள அவர்,
இந்த வேலையை எடுத்துக்கொள்ளும் அளவுக்கு முட்டாள்தனத்துடன் ஒருவர் கிடைத்தபிறகு மிக விரைவில் நான் ட்விட்டர் தலைமை நிர்வாகி பதவியிலிருந்து விலகுவேன்.
அதன்பின்னர், மென்பொருள் மற்றும் சர்வர் அணிகளை மட்டும் நான் கவனித்துக் கொள்வேன் எனப் பதிவிட்டுள்ளார்.
ஒக்டோபர் மாதம் 44 பில்லியன் டொலருக்கு டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினார். இதனையடுத்து நிறுவனத்தில் பல அதிரடி நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டிருந்தார்.
பணி நீக்கம், ப்ளு டிக் கட்டணம், தனியார் நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகள் மீதான நடவடிக்கைகள், பத்திரிகையாளர்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம் போன்ற எலான் மஸ்கின் அண்மைக்கால நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எலான் மஸ்கை தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகுமாறு கோரிக்கை வலுப்பெற்றது. இதனையடுத்து நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என வாக்கெடுப்பு ஒன்றை நடத்தினார்.
இந்த வாக்கெடுப்பில் 57.5 வீதம் பேர் பதவி விலக வேண்டும் என தெரிவித்திருந்தனர். இந்த வாக்கெடுப்பில், சுமார் 17.5 மில்லியன் மக்கள் பங்கெடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான நிலையிலேயே தலைமை நிர்வாகி பதவிக்கு மாற்றாக ஒருவரைக் கண்டறிந்ததும் அந்த பதவியில் இருந்து விலகுவதாகக் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், முட்டாள் என குறிப்பிட்டுள்ள அவரின் இந்த டுவிட்டர் பதிவு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.