பெண்னொருவரிடம் ஆபாசமாக உரையாடிய இம்ரான்கான் பேச்சால் சர்ச்சை!
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (Imran Khan) பெண் ஒருவரிடம் தொலைபேசியில் ஆபாசமாக உரையாடியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பதவியை இழந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், தற்போதைய பிரதமர் ஷபாஸ் ஷெரீப் (Shehbaz Sharif) அரசாங்கத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்.
மேலும் நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வருகிறார்.
இந்த நிலையில் இம்ரான்கான் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அவர் பெண் ஒருவருடன் தொலைபேசியில் ஆபாசமாக உரையாடுவதும், தமது வீட்டுக்கு வரும்படி அந்த பெண்ணை அவர் வற்புறுத்துவது போன்ற ஆடியோ பதிவை பத்திரிகையாளர் ஒருவர் யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.
அந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் பலரும் இம்ரான்கானை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
இம்ரான்கான் இதுதொடர்பில் உடனடியாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
அதே சமயம் இம்ரான்கானின் நற்பெயரை கெடுப்பதற்காக போலியான ஆடியோ ஒன்றை அவரது அரசியல் எதிரிகள் வெளியிட்டுள்ளதாக அவரின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது.