சவுதி அரேபியாவில் மரண தண்டனையில் இருந்து தப்பிய இலங்கைப் பெண்!
சவூதியில் மரண தண்டனையில் விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண் ஒருவர் தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.
சவூதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்து கொண்டிருந்த போது, அவர் வேலை செய்த வீட்டில் இருந்த சிறுமியை சூனியம் செய்து கொலை செய்ததாக கூறப்படும் இலங்கை பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
எனினும் இலங்கை தூதரக அதிகாரிகளின் தலையீட்டினால், உயிரிழந்த சிறுமியின் உடல் உறுப்புகள் ஆய்வக அறிக்கைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளத.
அதற்கமைய, அந்த, சிறுமி புற்றுநோயால் உயிரிழந்துள்ளதாக நீதிமன்றில் முன்னிலையில் தெரியவந்துள்ளது.
இந்தநிலையில், சவூதி அரேபிய நீதிமன்றம் தம்மை மரண தண்டனையில் இருந்து விடுவித்து சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் கடந்த 16ஆம் திகதி விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்ததாக அவிசாவளை தல்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய திருமணமாகாத பாத்திமா சமருத்தே என்ற பெண் தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் திகதியன்று சவுதி அரேபியாவுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
அங்கு இரண்டு வருடங்கள் மூன்று மாதங்கள் வேலை செய்துவிட்டு, நாடு திரும்பத் தயாரானபோது, தான் வேலை செய்த வீட்டின் முதலாளியின் மகளை சூனியம் செய்து கொலை செய்துவிட்டதாக வீட்டு உரிமையாளர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
தான் செய்த சூனியம் காரணமாகவே மகளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதென முறைப்பாட்டில் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.
தான் கைது செய்யப்பட்டு சவூதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், காவலில் வைக்கப்பட்டதாகவும், சிறையில் இருந்தபோது தனது முதலாளியின் மகள் நோய்வாய்ப்பட்டு இறந்ததால், அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டதாகவும் பாத்திமா கூறினார்.
பின்னர் தான் ஒன்பது வருடங்கள் சிறையில் இருந்ததாகவும், அதன் போது இலங்கை தூதரக அதிகாரிகள் தன்னுடன் தொடர்ந்து பேசி இந்த வழக்கை மீண்டும் நீதிமன்றத்திற்கு கொண்டு வர ஏற்பாடு செய்ததாகவும், அப்போது நீதிமன்றம் மூன்று தனிப்பட்ட அறிக்கைகளை கோரியதாகவும் அவர் கூறினார்.
அதற்கமைய, சிறுமிக்கு புற்று நோய் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றம் தன்னை விடுவித்ததாக அவர் கூறியுள்ளார்.