தந்தையின் 5 வயதில் நிறைவேற்றாத ஆசையை 50 வயதில் நிறைவேற்றிய மகன்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த செம்படை கிராமத்தை சேர்ந்தவர் மொட்டையன் மகன் ஏழுமலை (50). இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி சங்கீதா (45), மகன்கள் வேடியப்பன் (22), மணி (20) ஆகியோர் உள்ளனர். இவரது சிறு வயதில் குடும்ப ஏழ்மையின் காரணமாக இவரது பெற்றோர் மொட்டை அடித்து காது குத்தாமல் விட்டதாக கூறப்படுகிறது. காது குத்திக் கொள்ள வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே ஏழுமலை ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அதற்கான சூழ்நிலை அமையவில்லை. இந்நிலையில் அவர், தனது ஆசையை பிள்ளை மற்றும் உறவினர்களிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என நினைத்த உறவினர்கள் அவருக்கு மொட்டை அடித்து தாய்மாமன் மடியில் அமர வைத்து காது குத்தினர். அவர்களது குலதெய்வ கோயிலில் நேற்று நடந்த இந்நிகழ்வில் அவரது உறவினர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் வரவழைக்கப்பட்டு அசைவ விருந்து வைக்கப்பட்டது. 5 வயதில் நிறைவேறாத தனது ஆசை 50 வயதில் பிள்ளைகள் மற்றும் உறவினர்களால் நிறைவேறியதால் ஏழுமலை மிகவும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அடைந்தார்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *