ஓமானில் பணிபுரியும் வெளிநாட்டினரை பணியில் இருந்து நீக்க அந்நாட்டு அரசு உத்தரவு
ஓமான் அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புக்களில் பணிபுரியும் வெளிநாட்டினரை, உடனடியாக பணியில் இருந்து நீக்க அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளதால், 6.5 லட்சம் இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஓமன் நாட்டின் எதிர்காலம் கேள்விக்குறி ஆகியுள்ளது.
இந்தநிலையில், அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பில், ஓமன் தேசத்தில் குடியேறி, அரசு சேவைகளில் பணிபுரிபவர்களை வேலையில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக Gulf News செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், அங்கு பணியாற்றும் 6.5 லட்சம் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினரின் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், வேலையிழப்பு மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டினருக்கு வேலை வழங்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக ஓமன் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
ஓமன் மக்கள் தொகையில் 20% இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.