காதலனை காண சென்ற மகளை கொடூரமாக கொலை செய்த பெற்றோர்!

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் காதலனை காண சென்ற மகளின் தலையை பெற்றோரே துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள லிசாடி கேட் அருகே இளம் பெண்ணொருவரின் தலை இல்லாத உடல் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் சர் பிரம்மபுரி பகுதியில் உள்ள வாய்க்காலில் இளம்பெண்ணின் தலை கண்டெடுக்கப்பட்டது.

அதன் பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கொல்லப்பட்ட பெண் ஷாஹினா என்பது தெரிய வந்தது. உடனடியாக ஷாஹினாவின் பெற்றோரை பொலிசார் விசாரித்தனர். வசீம் என்பவரை காதலித்து வந்த ஷாஹினா, அவரையே திருமணம் செய்துகொள்ளப்போவதாக தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் ஷாஹினாவின் தந்தை ஷாஹித் குரேஷியும், தாய் ஷேஹ்னாஸ் குரேஷியும் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனால் தனது காதலனை சந்திக்க செல்ல குடும்பத்தினருக்கு தேநீரில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துவிட்டு கிளம்புவதை ஷாஹினா வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்றும் பெற்றோருக்கு தேநீரில் தூக்க மாத்திரையை ஷாஹினா கலந்து கொடுத்துள்ளார்.

ஆனால் மகள் மீது சந்தேகம் இருந்ததால் தாய் அதனை குடிக்கவில்லை. அதன் பின்னர் வீட்டை விட்டு வெளியேறும்போது ஷாஹினாவை பிடித்துக் கொண்ட அவரது தாய் சண்டையிட்டுள்ளார். அப்போது பெரும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஷாஹினாவின் பெற்றோர், சொந்த மகளின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.

பின்னர் ஷாஹினாவின் தலை, உடலை வெவ்வேறு இடங்களில் போட்டுள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், தனது மகளை இவ்வாறு கொலை செய்ததில் தனக்கு எந்தவித வருத்தமும் இல்லை என தந்தை ஷாஹித் கூறியுள்ளார்.   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *