திருமணத்திற்கு முன்னர் பெண்களிடம் கன்னித்தன்மை சான்றிதழ் கோரும் நாடு!
ஈரானில், பல பெண்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு திருமணத்திற்கு முன் கன்னித்தன்மை முக்கியமாகும் என தெரியவந்துள்ளது.
சில நேரங்களில் ஆண்கள் கன்னித்தன்மை சான்றிதழைக் கோருகின்ற நிலையில் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்று உலக சுகாதார அமைப்பு கருதுகின்றது.
ஆனால், கடந்த ஒரு வருடமாக இதற்கு எதிராக அதிகமானோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
“நீங்கள் கன்னிப் பெண்ணாக இல்லாததால் என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டீர்கள். உண்மை தெரிந்தால் யாரும் உங்களை திருமணம் செய்து கொள்ள மாட்டார்கள்” என முதன்முறையாக உடலுறவு கொண்ட பிறகு மரியத் என்ற பெண்ணின் கணவர் அவரிடம் தெரிவித்துள்ளார்.
இதுவரை உடலுறவு கொண்டதில்லை என்று கணவனை சமாதானப்படுத்த அந்த பெண் முயன்றுள்ளார். ஆனால் கணவர் அவரை நம்பவில்லை, மேலும் கன்னித்தன்மை சான்றிதழை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் இது அசாதாரணமான ஒரு விடயம் அல்ல. நிச்சயதார்த்தத்திற்குப் பிறகு, பல பெண்கள் மருத்துவரிடம் சென்று, தங்களின் கன்னித்தன்மையை நிரூபிக்கும் சோதனையைப் பெறுவதாக தெரியவந்துள்ளது.
எப்படியிருப்பினும், உலக சுகாதார அமைப்பின் தகவலுக்கமைய, கன்னித்தன்மை சோதனைக்கு அறிவியல் தகுதி இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.