ஜுலை 22 ஆம் திகதி பெற்றோல் கப்பல் இலங்கையை வந்தடையும்
எதிர்வரும் ஜுலை 22ஆம் திகதி பெற்றோல் கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக பிரதமரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிபொருள் நிலைமையின் தற்போதைய நிலை குறித்து பிரதமரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஊடகங்களுக்கு விளக்கமளிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கம் அதற்கு முன்னர் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், இருப்பினும் அவை உறுதிப்படுத்தப்படும் வரை அது தொடர்பான விபரங்களை தற்போதைக்கு வெளியிட முடியாதுள்ளதாகவும் அவர் விளக்கினார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ள எடுக்கப்பட்டு வரும் அவசர நடவடிக்கைகள் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (29) பிற்பகல் தேசிய பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளின் ஆசிரியர்கள் மற்றும் செய்திப் பணிப்பாளர்களுக்கு விளக்கமளித்திருந்தார்.
இதில் பிரதமரின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் கலாநிதி ஆர்.எச். சமரதுங்க, நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதாரம் இந்த ஆபத்தான நிலையை அடைந்தமை குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.