இந்தியாவில் இந்து முஸ்லிம் மோதல் இருவர் உயிரிழப்பு!
ஆளும் கட்சி அதிகாரிகளின் முகமது நபியைப் பற்றிய இழிவான கருத்துக்களைத் தொடர்ந்து கிழக்கு இந்தியாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மோதல்களில் இரண்டு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி நகரில் வன்முறையை முறியடிக்க பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர், எனினும், பலியான இருவரும் பொலிஸாரினால் கொல்லப்பட்டார்களா அல்லது கலவரக்காரர்களால் கொல்லப்பட்டார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ராஞ்சி மற்றும் பிற பகுதிகளில் நடந்த சம்பவத்தில் குறைந்தது 14 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாக மூத்த பொலிஸ் அதிகாரி சுரேந்திர குமார் ஜா தெரிவித்தார். அமைதியின்மை அதிகரிப்பதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதுடன், இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.
வடக்கு உத்தரபிரதேச மாநிலத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு பல நகரங்களில் அமைதியின்மை பரவியதை அடுத்து, கலவரக்காரர்கள் என்று கூறப்படும் 230 பேரை கைது செய்ததாகக் கூறியுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சியின் (BJP) இரண்டு அதிகாரிகள் நபிகளாரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீபத்தில் தெரிவித்த கருத்துக்களுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
பாஜக அதன் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவை இடைநீக்கம் செய்துள்ளதுடன் மற்றொரு தலைவரான நவீன் குமார் ஜிண்டால் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைக் கூறியதற்காக வெளியேற்றப்பட்டார்.
இது இந்திய முஸ்லிம்களை கவலைக்குள்ளாகியுள்ளதுடன் பல முஸ்லீம் நாடுகளில் இருந்து இராஜதந்திர முரண்பாட்டை ஏற்படுத்தியது. பாஜக – ஒரு இந்து தேசியவாதக் கட்சி – புண்படுத்தும் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், பொது மேடைகளில் மதம் குறித்து பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் கட்சி தலைவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.