இப்படி செய்தால் டொலர்களை சம்பாதிக்க முடியுமாம் சஜித் தெரிவிப்பு!
தகவல் தொழிற்நுட்ப துறையில் ஏற்றுமதிகளை அதிகரிப்பதே டொலர்களை சம்பாதிக்கக் கூடிய சிறந்த வழிமுறையாக இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்திடம் வெற்று பணப்பை
தகவல் தொழிற்நுட்ப துறையின் மூலம் நாட்டுக்கு தேவையான டொலர்களை ஈட்ட முடியும். இதனால், தகவல் தொழிற்நுட்ப துறையின் ஏற்றுமதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் பணப் பையில் பணமில்லை. வங்குரோத்து அரசாங்கமும் நாடுமே தற்போது இருக்கின்றது. அரசாங்கம் வங்குரோத்து அடைந்து விட்டாலும் எதிர்க்கட்சி நாடுக்காக அர்ப்பணிப்புகளை செய்யும்.
ரணில் அரசாங்கம் மறுசுழற்சி அரசாங்கம்
ராஜபக்ச அரசாங்கம் நாட்டை அழித்தது. அந்த அரசாங்கத்திற்கு பதிலாக தற்போது மறுசுழற்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது உணவு பிரச்சினை உருவாகியுள்ளது.
பயிர் செய்கைகளில் ஈடுபடுமாறு நாட்டில் வாழும் 220 லட்சம் மக்களிடம் கோரிக்கை விடுக்கின்றேன். இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி வலுவை பெற்றுக்கொடுக்கும் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.