ஈரானில் உச்சத்தில் வறுமை பாலியல் தொழில் செய்யும் பெண்கள்!
ஈரான் தலைநகரில் வசிக்கும் நெதா விவாகரத்தான ஒரு பெண். அவருக்கு ஒரு மகன் இருக்கிறான். பகலில் முடிதிருத்துபவராக பணியாற்றும் அவர் இரவில் விபச்சாரம் செய்கிறார்.
தனது நாட்டில் பெண்களுக்கு மரியாதையின்மை, பொருளாதார வீழ்ச்சி, விலைவாசி உயர்வு காரணமாக பாலியல் தொழிலிற்கு தள்ளப்பட்டதாக நெதா கூறுகிறார். தனது மகனை தனியொருத்தியாக கவனித்துக் கொள்வதற்கு வேறு வழியின்றி இந்த இழிவான தொழிலில் தனது ஆன்மாவை விற்பதாக அவர் வருந்துகிறார்.
ஈரானில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சுலபமில்லை
2012 ஆம் ஆண்டு, ஈரான் அரசு பாலியல் தொழிலை தடுப்பதற்காக, தேசிய அளவில் ஒரு இயக்கத்தை அறிவித்தது. ஆனால் தன்னார்வ ஆர்வலர்களது மதிப்பீட்டின் படி விபச்சாரத்திற்கு தள்ளப்பட்ட மக்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
ஈரானின் மதம் சார்ந்த பழமைவாத அரசு, நாட்டில் பாலியல் தொழில் இல்லையெனவும், இருப்பதாகக் கூறுவது மேற்கத்திய நாடுகளின் சதி என்கிறது. அப்ஃதாப் சொசைட்டி எனும் போதைக்கு அடிமையான பெண்களை மீட்கும் தன்னார்வ அமைப்பின் படி, தலைநகர் தெஹ்ரானில் மட்டும் விபச்சாரம் செய்யும் பெண்கள் 10,000 பேர் இருக்கிறார்கள். அவர்களில் திருமணமானவர்கள் 35%. ஆனால் தலைநகரில் பாலியல் தொழில் செய்யும் பெண்கள் மேற்கண்ட எண்ணிக்கையை விட இருமடங்கு அதிகம் என்கிறார் தெஹ்ரான் பல்கலை பேராசிரியர் ஒருவர்.
ஈரானில் ஷியா ஷரியத் சட்டப்படி ஆட்சி நடப்பதால் எங்கேயும் பாலின சமத்துவம் இல்லை. இதனால் பெண்களுக்கு இயல்பாகவே வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் பெண்கள் பாலியல் தொழில் செய்வதற்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் ஈரானில் பாலியல் தொழிலில் ஈடுபடுவது சுலபமில்லை, மிகவும் இடர்கள் நிறைந்தது.
பொலீசிடம் பிடிபட்டால் பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும். இதை ஆண்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இது பாலியல் தொழில் அல்ல, தற்காலிக திருமணம் என்று வாதிடுகிறது
ஈரான் பல்கலையின் மாணவியாக இருக்கும் மன்ஹாஸ் பகுதி நேரமாக பாலியல் தொழில் செய்கிறார். பல முறை தனது வாடிக்கையாளர்கள் உறவு முடித்து விட்டு, பணம் கொடுக்காமல் சென்றதை குறிப்பிடுபவர், இதற்காக யாரிடமும் புகார் அளிக்க முடியாது என்கிறார். தெஹ்ரானில் வாழ்க்கைத் தரச் செலவுகள் அதிகம் என்பதால் தனது செலவுகளுக்கு வேறு வழியின்றி பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக அவர் கூறுகிறார்.
1979 இல் ஈரானில் புரட்சி நடந்து மன்னர் ஷா ஆட்சி தூக்கியெறியப்பட்டு அயத்துல்லா கோமேனி ஆட்சியைப் பிடித்தார். அப்போது கைது செய்யப்பட்ட பாலியல் தொழில் செய்யும் பெண்களுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. தலைநகரில் நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் மையங்களும் மூடப்பட்டன.
ஆனாலும் சட்டப்படியே பாலியல் தொழிலிற்கு ஒரு குறுக்கு வழி இருக்கிறது. ஷியா இஸ்லாமிய சட்டப்படி குறுகிய காலத் திருமணங்கள் செய்து கொள்ளலாம். இதன்படி திருமணத்திற்கு முன்பேயே சேர்ந்து வாழும் நாட்களை ஒப்பந்தத்தில் குறிப்பிடலாம். இதை ஸவாய் அல் முட்டா அல்லது கேளிக்கைத் திருமணங்கள் என்று அழைக்கிறார்கள். இது சட்டப்படி பாலியல் தொழில் என்று கருதுப்படுவதில்லை.
ஈரானின் புனித நகரங்களான மஷாத் மற்றும் கியோம் இரண்டிலும் வருடந்தோறும் உலகெங்கிலுமிருந்து பயணிகள் ஆன்மீக சுற்றுலாவிற்காக வருகிறார்கள். அப்போது ஈரானிய ஆண்களும், சுற்றுலா பயணிகளும் முட்டா திருமணம் மூலம் பாலியல் தொழிலை அனுபவிக்கிறார்கள். அரசோ இது பாலியல் தொழில் அல்ல, தற்காலிக திருமணம் என்று வாதிடுகிறது. தற்போது ஏராளமான ஆன்லைன் நிறுவனங்கள் இந்த கேளிக்கை திருமண சேவைகளை அளித்து வருகின்றன. அரசின் அனுமதி பெற்று இந்த நிறுவனங்கள் வாட்ஸ்அப், டெலகிராம் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பணிபுரிகின்றன.
ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான இந்த தடைகள் அங்கே வாழ்வை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கின்றன.
ஈரானில் விலைவாசி உயர்விற்கும், வேலையின்மை அதிகமாக இருப்பதற்கும் முக்கியமான காரணம் அமெரிக்க விதித்திருக்கும் பொருளாதாரத் தடைகள். ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான இந்த தடைகள் அங்கே வாழ்வை பெரும் சிரமத்திற்கு ஆளாக்கியிருக்கின்றன.
கடந்த வருடம் முதல் ஈரானின் பணவீக்கம் 48.6% அதிகரித்திருக்கிறது. வேலை வாய்ப்புகளும் குறைவு. கிடைக்கும் வேலைக்கும் ஊதியம் குறைவு.
இந்தப் பின்னணியில் ஆண்களும் பாலியல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். 20 முதல் 35 வயதில் இருக்கும் ஆண் பாலியல் தொழிலாளர்கள் பணத்திற்காக பெண்களுக்கு தமது உடலை விற்கிறார்கள். இந்த போக்கு ஈரானின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் இருக்கிறது.
28 வயது கம்யார் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். பேரங்காடி ஒன்றில் காசளராக பணியாற்றும் அவர் தனது செலவுகளுக்காக அப்பாவின் உதவியை சார்ந்திருந்தார். தற்போது பாலியல் தொழில் செய்வதால் தனது குடும்பத்தை பிரச்சினையின்றி பராமரிக்க முடிவதாகவம், தெஹ்ரானில் ஒரு அபார்ட்மென்டில் வசிக்க முடிவதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
சமூக உடகங்களில் தனது வாடிக்கையாளர்களை கண்டறியும் கம்யார், தனக்கு நல்ல பணம் கிடைப்பதாகவும் கூறுகிறார். பொறியியல் பட்டம் முடித்திருந்தாலும் அதற்கேற்ற வேலை அவருக்கு கிடைக்கவில்லை. தனக்கு தனது படிப்பு சார்ந்த துறை விருப்பமாக இருந்தாலும் அதில் எதிர்காலமில்லை என்கிறார். முன்பு தான் ஒரு பெண்ணைக் காதலித்ததாகவும் ஆனால் சரியான வேலையில்லை என்பதால் மணமுடிக்கவில்லை என்றும் வருத்தப்படுகிறார்.
மேற்குலகின் பொருளாதாரத் தடை இப்படியாக ஒரு மதவாத நாட்டில் விபச்சாரத்தை பிழைப்பதற்கான ஒரு தொழிலாக மாற்றியிருப்பது ஒரு அவலம்.