சொக்லேட்டைக் குறைத்துவிட்டு பூச்சிகளை சாப்பிடச் சொல்லும் சுவிட்சர்லாந்து!
சுவிஸ் அரசு, பிள்ளைகள் சாக்லேட்டைக் குறைத்துவிட்டு அதற்கு பதிலாக பூச்சிகளை சாப்பிடச் சொல்வதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
சீஸ் சாக்லேட்டுக்கு பதிலாக பூச்சிகள்
சுவிஸ் அரசு, பிள்ளைகள், சாக்லேட், சீஸ் போன்றவற்றை சாப்பிடுவதைக் குறைத்துவிட்டு, அதற்கு பதிலாக பூச்சிகளை சாப்பிடச் சொல்கிறதாம். என்ன பூச்சிகளை உண்ணுவதா? கேட்பதற்கே ஒரு மாதிரியாக இருக்கிறதே என்று நீங்கள் எண்ணலாம். ஆனால், கொஞ்சம் மசாலா எல்லாம் சேர்த்தால், வெட்டுக்கிளி போன்ற பூச்சிகள் சாப்பிடத்தக்கவையாக மாறிவிடுமாம்!
சரி, ஏன் ஒரு நாடு, பழங்கள் காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை உண்ணச் சொல்லாமல், தன் பிள்ளைகளை பூச்சிகளை உண்ணும்படி கூறுகிறது? அதாவது, வருங்காலத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் சில நாடுகளில் உணவுப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாமாம். அதுவும், சில வருடங்கள், ஏன் சில மாதங்களில் கூட அது நிகழலாமாம்.
2022ஆம் ஆண்டு, மே மாதம், ஜேர்மனியும், ஐக்கிய நாடுகளும், உலகம் முழுவதும் உணவுத்தட்டுப்பாடு ஏற்படுவதைக் குறித்த பெரிய எச்சரிக்கை விடுத்தன. ஆனால், அதை யாரும் கவனித்ததுபோல் தெரியவில்லை.
ஆனால், 2022 ஆகத்து மாதம் வந்தபோது, பணக்கார நாடுகளிலேயே மக்கள் உணவுத் தட்டுப்பாட்டை சமாளிக்கவேண்டுமானால், பயன்படுத்த சிறந்த திகதி தாண்டிய உணவைக்கூட, முகந்து பார்த்து, அவை நன்றாக இருந்தால் அவற்றை பயன்படுத்துவதுதான் சிறந்த வழி என தீர்மானிக்கும் நிலை உருவாகியிருந்தது.
ஒரு பக்கம் உணவுத் தட்டுப்பாட்டுக்கு பண வீக்கம் காரணம் என கூறப்படுகிறது. அதுவும் ஓரளவு உண்மைதான். ஆனால், உண்மையான பிரச்சினை, தொடர்ச்சியான உணவுப்பொருட்கள் விநியோகம் இல்லை என்பதுதான்.
நாம் நம் வீட்டில் சமைக்கும் உணவுக்கு, எங்கோ உள்ள, உணவுப்பொருட்களை விளைவிக்கும், அவற்றை கொண்டு வரும் மக்களை சார்ந்துள்ளோம். ஒரு 100 ஆண்டுகளுக்கு முன்வரை, நம் மூதாதையர்கள் தங்களுக்கு வேண்டிய உணவை தங்கள் வீட்டின் பின்னாலேயே விளைவித்தார்கள்.
ஆனால், தங்கள் தேவைகளுக்காக உணவை விளைவிக்கும் அந்த திறமை, நமது நாகரீக சமுதாயத்தால் காணாமல் போகச்செய்யப்பட்டுவிட்டது.
அதற்கு இதுதான் காரணம் என ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு பொய்யை நம்மிடம் சொல்கின்றன. ஆக, உணவுத்தட்டுப்பாட்டை எதிர்கொள்வதற்காக, சுவிட்சர்லாந்தில், அரசியல்வாதிகள் பிள்ளைகளை பூச்சிகளை உண்ணப்பழக்குகிறார்கள். எதிர்காலத்தில் அவை மட்டுமே கிடைக்கும் முக்கிய உணவாக மாறிவிடலாம் என அவர்கள் கருதுகிறார்கள்.
ஆனால், இப்படி புழுக்களையும் பூச்சிகளையும் உண்ண பிள்ளைகளைப் பழக்குவதற்கு பதில், உணவுப்பிரச்சினையை எதிர்கொள்ள இரண்டு எளிய தீர்வுகள் உள்ளன.
தங்களால் என்ன உணவுப்பொருட்களை விளைவிக்க முடியுமோ, அவற்றை மக்கள் தங்கள் வீடுகளில் விளைவித்தல், உணவை வீணாக்காமல் நீண்ட காலத்துக்கு பாதுகாத்து வைப்பதற்கான முறைகளை உருவாக்குதல் ஆகியவற்றால் உணவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்.
சிறிய அடுக்குமாடிக் குடியிருப்புகளில் கூட, சில பழம் தரும் தாவரங்களை வளர்ப்பதற்கு இடம் நிச்சயம் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லைதானே!