பாராளுமன்ற உறுப்பினர் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்!
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனையில், தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நிட்டம்புவ பிரதேசத்தில் (09) பிற்பகல் இடம்பெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் மரணம் முதலில் ‘தற்கொலை’ எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது நிட்டம்புவவில் பொதுமக்கள் மீது நாடாளுமன்ற உறுப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், கட்டடமொன்றில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொதுமக்கள் கட்டடத்தை சுற்றி வளைத்தமையினால் அவர் தனது துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரின் மரணம் தொடர்பில் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் நீதித்துறை வைத்திய அதிகாரி நடத்திய பிரேத பரிசோதனையில் அவர் தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது அவருடன் இருந்த பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கிச் சூட்டுக் காயத்தினால் உயிரிழந்துள்ளதாகவும், அவரது உடலில் தோட்டா ஒன்று காணப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்பு அதிகாரியும் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், இதனால் மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேத அறிக்கையின் படி நாடாளுமன்ற உறுப்பினரோ அல்லது அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரோ தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும், கடுமையான தாக்குதலினால் ஏற்பட்ட காயங்களினால் உயிரிழந்துள்ளதாகவும் பிரேத அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.