கொழும்பில் திடீரென குவிக்கப்பட்ட இராணுவம்!
கொழும்பின் பல்வேறு பகுதிகளில் திடீரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுப்படுத்தியுள்ளனர்.
அத்துடன், மிரிஹான பகுதியில் பொலிஸ் தடைகள் போடப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், நுகேகொடை – விஜேராம சந்தியில் பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
நாட்டின் நெருக்கடி நிலையை சுட்டிக்காட்டி நேற்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்க்பட்ட நிலையில், இறுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்த பின்னணியில், மேல்மாகாணத்தில் இன்று நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாளை காலை 6 மணி வரையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் முன்னெடுக்கபட்டுவரும் ஆர்ப்பாட்டங்களினால் ஏற்படும் அமைதியின்மை மற்றும் கலவரங்களை தடுக்கும் வகையில் இவ்வாறு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.