மன அழுத்தங்கள் உருவாக்கும் ஆபத்து!

மாரடைப்பு என்று எங்களிடம் வருகிறவர்களில் அனேகம் பேர் குடும்பம் அல்லது பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

இதயம் பாதிப்படைந்த நிலையில் நோயாளிகள் வருகிறபோது நாங்கள் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்பதுண்டு.

1.உங்களுக்குச் சர்க்கரை நோய் இருக்கிறதா?

2.புகை பிடிப்பீர்களா?

3.அதிகமான கொழுப்புச் சத்து இருக்கிறதா?

இந்த மூன்று கேள்விகளுக்கும் ‘இல்லை’ என்று சொல்லுகிறவர்களுக்குக் கூட ‘மாரடைப்பு’ வரலாம்.

இதை நாங்கள் ‘அடைப்பு இல்லாத மாரடைப்பு நோய்’ என்று சொல்வோம். ‘எக்சிண்ட்ரோம்’ என்று சொல்வதுண்டு.

என்னுடைய அனுபவத்தில், கடந்த 35 வருடங்களில் இருபத்தி இரண்டிலிருந்து நாற்பத்திரண்டு வயதுக்குள் பலரைப் பார்த்திருக்கிறேன்.

சிலருக்கு ‘இண்டர்வியூ’ போகும்போது ரத்த அழுத்தம் கூடிவிடும். வெளியே வந்ததும் குறைந்துவிடும். நம்முடைய ரத்த அழுத்தம் நம்முடைய மனோநிலையைப் பொறுத்த விஷயம். இதை ரியாக்சன் டூ ஸ்டிரெஸ் (Reaction to stress) என்று சொல்வோம்.

உணர்ச்சிபூர்வமாக நாம் இருக்கும்போது நம்முடைய உடம்பு அதை எப்படிப் பிரதிபலிக்கிறது?

ஒவ்வொருவருக்கும் பிரதிபலிக்கும் விதம் மாறுபடலாம். சிலர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மன அழுத்தத்திலும் இருப்பார்கள்.

ஆனால் அவர்களது முகத்தில் அது பிரதிபலிக்காது. வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். சிலரது முகப்பதற்றத்தைப் பார்த்ததுமே புரிந்துகொள்ளலாம்.

கடன் நெருக்கடியான நேரங்கள், வருமானவரி நெருக்குதல் போன்ற சமயங்களில் சிலருக்குக் கூடுதல் ரத்த அழுத்தம் இருக்கும். சராசரியாக 120 இல் இருந்து 80 அல்லது 110 இல் இருந்து 70 ஆக இருக்கலாம்.

30 வருடங்களுக்கு முன்பு பலருடைய ரத்த அழுத்தம் இதையொட்டியே இருக்கும். இப்போது நிலைமை தலைகீழ். இப்போது பரவலாக 140-80, 160-90 என்கிற விதத்தில் ரத்த அழுத்தம் பலருக்குக் கூடி இருக்கிறது.

பொருட்காட்சிக்குச் சாதாரணமாக வருகிறவர்களின் ரத்த அழுத்தத்தை ஒரு மாதிரிக்காகச் சோதித்தபோது, வந்தவர்களில் இருபது சதவிகிதத்தினருக்குக் கூடுதல் ரத்த அழுத்தம் இருந்தது.

ஆனால் அதற்கான அறிகுறிகள் எதுவும் அவர்களிடம் தெரியவில்லை. சிலருக்கு அதிகமாக இருக்கும். சொன்னால் நம்ப மாட்டார்கள்.

எப்போது ரத்த அழுத்தம் அறிகுறிகளை உண்டு பண்ணும்.?

உயர் ரத்த அழுத்தத்தால், இதயத் தசைகள் தடிக்கும் போது, மூளையில் உள்ள சிறிய ரத்தக் குழாய்கள் வெடித்துப் போகும் போதோ அதற்கான அறிகுறிகள் தெரியலாம்.

ரத்த அழுத்தம் தொடர்ந்து இருக்கும்போது, அந்த அழுத்தத்திற்கு ஏற்ப ரத்தக் குழாய்கள் தங்களை மாற்றிக் கொள்கின்றன.

தங்களுடைய சுவர்களைப் பருமனாக்கிக் கொள்கின்றன. இதனால் சட்டென்று ரத்தக்கசிவு உருவாகி விடுவதில்லை.

இதன் தீவிரத்தை எப்போது உணர முடியும்?

நன்றாக இருப்பார் ஒருவர். திடீரென்று மயக்கமாகி விழுந்து விடலாம். மூளையைச் சுற்றி மேலே இருக்கிற தசைச் சுவர் மேலே ரத்தம் கசியலாம்.

மூளைத் தசைகளிலோ, மூளையில் உள்ள ‘வெண்டிரிக்க’ளிலோ ரத்தம் கசியலாம். அம்மாதிரி ரத்தம் கசிந்தால் இறப்பு ஏறக்குறைய நிச்சயம்.

இந்தப் பாதிப்பு பாரம்பரியம் காரணமாகவும் வரலாம். உயர் ரத்த அழுத்தத்தின் காரணமாக, ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுவதும் பாரம்பரியமாக வருமா என்பது சிலருக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம். ஆனால் வருவது உண்மை.

அப்பா ஒரு விஷயத்திற்கு அதிகமாகக் கத்தக் கூடியவராக இருந்தால், மகனும் அப்படியே இருக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

பர்னாலிட்டியும் பேசுகிற, பழகுகிற விஷயங்கள் கூட மரபணுவிலேயே உண்டாக்கப்பட்ட பதிவுகள். சிலருக்குத் தாய், தந்தை இருவருடைய மரபணு பாதிப்பு இருக்கும்.

ஆனால் நல்ல சூழ்நிலை இருந்தால், மரபணுக்களில் பொதிந்திருக்கிற இந்தப் பதிவுகள் வெளிப்படாது. தகுந்த சூழ்நிலை இல்லாவிட்டால், பாதிப்பு வந்து விட வாய்ப்புகள் அதிகம்.

அதனால் சூழ்நிலையும் முக்கியம். உயர் மன அழுத்தத்தின்போது, தந்தையும் தாயும் எப்படி அதைப் பிரதிபலிக்கிறார்கள் என்பதைப் பார்த்து, அதன்படியே தாங்களும் பிரதிபலிப்பவர்களும் உண்டு.

மன அழுத்தம் உருவாகும்போது, ரத்த நாளங்களில் ஓரளவுக்குத் தான் சுருக்கம் ஏற்பட வேண்டும். ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்பட்டதும், ரத்த அழுத்தம் கூடி விடுகிறது.

நமது உடம்பில் ‘அஞ்சியோ-டென்ஷன்’ என்கிற முக்கியமான சுரப்பி சுரக்கும்போது ரத்த அழுத்தம் சமன்படுகிறது. இது ரத்த நாளங்களைச் சுருக்கும் சுரப்பி. இன்னொரு சுரப்பியிலிருந்து நைட்ரிக் ஆக்சைட் சுரந்து ரத்த நாளத்தை விரிவுபடுத்தும்.

இந்த இரண்டு சுரப்பிகளும் ஒழுங்காக வேலை செய்தால், மன அழுத்தமும் ரத்த அழுத்தமும் கூடினாலும் சமச்சீரான நிலை இருக்கும்.

நைட்ரிக் ஆக்சைடு குறைந்து, எதிர்ப்பு சக்தி குறைந்தால் சுருக்கம் பன்மடங்கு அதிகமாகி, ரத்தக் குழாய்களில் அடைப்பு உருவாகிறது.

ஒரு குடும்பத்தில் திடீரென்று மாறுதலான அல்லது எதிர்பாராத சூழ்நிலை ஏற்பட்டால் சிலர் இதயத்தைப் பிடித்துக் கொண்டு, ஆஸ்பத்திரிக்கு வந்து விடுவார்கள்.

காரணம், ரத்தக் குழாய்களில் ஓரளவு அடைப்பு இருந்தால், இம்மாதிரியான நேரங்களில் நாளங்கள் அளவுக்கு மீறிச் சுருங்கும். உடனே வலி வந்து விடுகிறது. உயர் மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல், ரத்த நாளங்கள் அப்-நார்மலாக பிரதிபலிப்பதன் விளைவு இது.

இது எப்படி இதயத்தைப் பாதிக்கிறது?

இதயம் தான் உடம்பு முழுக்க ரத்தத்தை விநியோகிக்கிறது. அதன் இயக்கம் ஒழுங்காக இருக்க, அதற்கென்று குறிப்பிட்ட அளவு ரத்தம் வினியோப்பட வேண்டும்.

மகா தமணியிலிருந்து இரண்டு ரத்தக் குழாய்கள் வெளிவந்து, இதயத்தின் மேலே கொடிபோலப் படர்ந்து, இதயத்தின் ஒவ்வொரு தசைக்கும் ரத்தத்தை எடுத்துக் கொண்டு போகும்.

இரத்தக் குழாய்களில் அடைப்பு வந்தால், இதயத்திற்குப் போதுமான ரத்தம் போகாத நிலையில் ‘மாரடைப்பு’ வந்து விடுகிறது. அடைப்பு எந்தளவுத் தீவிரமாக இருக்கிறதோ, அதைப் பொறுத்து மாரடைப்பின் தீவிரமும் மாறும்.

மன அழுத்தத்திற்கான காரணங்கள் சிறியதா? பெரியதா? என்பது ஒரு பிரச்சினை இல்லை. அதனால் உருவாகக்கூடிய பாதிப்புகள் எந்த வகையான ரத்தநாளப் பிரிவைத் தாக்குகிறது என்பதைப் பொருத்து பாதிப்பும் வேறுபடும்.

அதிலும் இதயத்தில் பிரிகிற மூன்று ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டால், பிரச்சினைகள் அதிகம். மாரடைப்பு என்று எங்களிடம் வருபவர்களில் அனேகம் பேர் குடும்பம் அல்லது பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

இம்மாதிரி மன அழுத்தம் உருவாகும்போது உடம்பில் பல அமிலங்கள் உருவாகும்.

இரத்தக் குழாய்களின் மேலே இருக்கிற கண்ணாடி உறை போன்ற பகுதியை இந்த அமிலங்கள் பாதிப்பதால், அந்த இடத்தில் ரத்த அணுக்கள் உறைந்து மாரடைப்பு வரலாம்.

மரணமும் ஏற்படலாம். மன அழுத்தத்தின் தீவிரம் விளைவு இது.

– அகில் அரவிந்தன் தொகுத்த ‘இதயமே இதயமே’ நூலிலிருந்து மருத்துவ நிபுணா் டாக்டர். எஸ்.தணிகாசலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *