இலங்கை அணிக்கு 20% அபராதம் நிஸ்ஸங்கவிற்கு ஒரு மறைப் புள்ளி!

சுற்றுலா இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான 2ஆவது ரி20 போட்டியின் போது குறைந்த பந்துவீச்சு வேகத்தை பேணியமை தொடர்பில், இலங்கை அணிக்கு போட்டித் தொகையில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) இனால் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒழுக்க கோவையின் 2.22 இற்கு அமைய, உரிய நேரத்திற்குள் இன்னிங்ஸிற்கான பந்துவீச்சை நிறைவு செய்யாவிடின் அவ்வாறு பூர்த்தி செய்யப்படாத தலா ஒவ்வொரு ஓவருக்கும் போட்டியில் விளையாடுவதற்காக அணிக்கு வழங்கப்படும் தொகையில் 20 வீத அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன், நேற்று (13) இடம்பெற்ற இப்போட்டியில் தகாத வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டமை தொடர்பில், இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு ஒரு மறைப் புள்ளி (demerit) வழங்கப்படுவதாக ICC அறிவித்துள்ளது.

பெத்தும் நிஸ்ஸங்க துடுப்பெடுத்தாடும்போது, அவர் அடித்தாடிய பந்து தவறவிடப்பட்டதை அடுத்து, அவர் மேற்கொண்ட தகாத வார்த்தைப் பிரயோகம் தொடர்பிலேயே குறித்த அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் அவ்வாறு  பேசியமை விக்கெட்டிலிருந்த ஒலிவாங்கியில் பதிவாகி இருந்தது.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) ஒழுக்க கோவையின் 2.3 விதிமுறை மீறப்படுவதன் காரணமாக, அவருக்கு இவ்வாறு ஒரு மறைப் புள்ளி வழங்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு இது தொடர்பில் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *