ஹிஜாப்,காவி துண்டு அணிய தடை நீதிமன்றம் உத்தரவு!

வழக்கின் தீர்ப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஹிஜாப் (பர்தா) அல்லது காவி துண்டு அணிந்து வரக்கூடாது என கர்நாடக உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் (மேல்நிலைப்பள்ளி) மாணவ-மாணவிகள் சீருடை அணிந்து வர வேண்டும் என்று அந்த கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் (தலைப்பகுதியை மூடும் உடை) அணிந்து வந்தனர். இதற்கு அந்த கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. அந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகள் பர்தா (உடல் முழுவதும் மூடும் உடை) அணிந்து போராட்டம் நடத்தினர். 

இந்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த விவகாரம் கர்நாடக மாநிலம் முழுவதும் பரவியது. ஒரு சில இடங்களில் மோதல்களும் இடம்பெற்றன.. இதனால், பள்ளி, கல்லூரிக்கு அனைவரும் சீருடை அணிந்து தான் வர வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே, பள்ளி, கல்லூரிகளுக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக்கோரி கர்நாடக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த மாணவிகளான ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் உள்ளிட்டோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக உச்சநீதிமன்றம் தனி நீதிபதி கிருஷ்ண தீக்சித் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.  

அப்போது, கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி தெரிவித்தார். மேலும், ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக உச்சநீதிமன்றத்தின் விரிவான அமர்வு விசாரிக்கும் என தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, இந்த வழக்கு கர்நாடக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், காஸி ஜெய்புனிஷா முகைதின் (பெண் நீதிபதி) முன்னிலையில் நேற்று (10) விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கல்வி நிறுவனங்களில் (பள்ளி, கல்லூரிகள்) ஹிஜாப்  (தலைப்பகுதியை மூடும் உடை) அணிவது அடிப்படை உரிமைகளுக்கு கீழ் வருகிறதா? என்பது குறித்து பரிசீலனை செய்கிறோம். அதேபோல், ஹிஜாப் அணிவது (இஸ்லாமிய) மத நடைமுறையில் இன்றியமையாததா? என்பது குறித்து பரிசீலனை செய்ய உள்ளோம். இந்த வழக்கில் இறுதி உத்தரவு வரும் வரை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தெரிவிக்கும் வாய்மொழி கருத்துக்களை ஊடகங்கள் வெளியிட வேண்டாம்.

மேலும், கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளை திறக்க உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகளில் மாணவ-மாணவிகள் ஹிஜாப் அல்லது காவித்துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை இந்த இடைக்கால உத்தரவை கடைபிடிக்க வேண்டும். 

இந்த வழக்கு விசாரணை வரும் திங்கள் கிழமை முதல் தினசரி அடிப்படையில் தொடர்ந்து நடைபெறும். இறுதி தீர்ப்பு வரும் வரை மாணவ-மாணவிகள் மதத்தை அடையாளப்படுத்தும் எந்த வித ஆடைகளையும் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரக்கூடாது. 

இறுதி உத்தரவு வரும் வரை பள்ளி, கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் ஹிஜாப் அல்லது காவி துண்டு என எந்த வித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக்கூடாது என்ற இந்த இடைக்கால உத்தரவு அமலில் இருக்கும் என கர்நாடக ஐகோர்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்த இடைக்கால உத்தரவையடுத்து வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இந்த உத்தரவு மூலம் கர்நாடகாவில் வரும் திங்கட்கிழமை முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *