தடுப்பூசி போட மறுத்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை மறுப்பு!
பொஸ்டன் நகரில் தடுப்பூசி செலுத்தாத நோயாளிக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொஸ்டன்நகரில் உள்ள பிரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையில் 31 வயது இளைஞர் ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் அறுவை சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை என்பதால் நோயாளிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற கொள்கையை மருத்துவமனை நிர்வாகம் கடைப்பிடிக்கிறது. ஆனால் அந்த நோயாளியோ தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்துள்ளார். இதனால் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்போர் பட்டியலில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
இதுகுறித்து நோயாளியின் தந்தை டேவிட் பெர்குஷன் கூறியதாவது இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் காலம் எல்லை கடந்துவிட்டது. என் மகன் மரணத்தின் விளிம்பில் இருக்கிறான். மருத்துவமனையின் இந்த முடிவு என் மகனின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது. தடுப்பூசியை அவன் நம்பவில்லை. இதனால் இதய மாற்று அறுவை சிகிச்சையின் பட்டியலிலிருந்து அவனை நீக்கிவிட்டனர். அவன் விரும்புவதை ஏற்றுஇ வேறு மருத்துவமனைக்கு மாற்ற முடிவு செய்துள்ளேன். ஆனால் அதற்கு அதிக நேரம் இல்லை. அவனது உடல்நிலை மிக மோசமாக உள்ளது’ என்று அவர் தெரிவித்தார்.
நியூயார்க் பல்கலைக்கழக மருத்துவ வல்லுநர் ஆர்தர் கேப்லான் கூறுகையில் ‘உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளிக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால் கொரோனாவால் மரணமும் நிகழலாம். உறுப்புகள் பற்றாக்குறையாக உள்ளன. தடுப்பூசி செலுத்தப்பட்டவர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிர்வாழ சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. உயிர்வாழ வாய்ப்பில்லாத ஒருவருக்கு உறுப்புகளை பொருத்துவதற்கு மருத்துவமனை நிர்வாகம் விரும்புவதில்லை’ என்றார்.