கொரோனா மாதா கோயில் இரவோடு இரவாக அகற்றப்பட்டதால் அதிருப்தி!
உத்தரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா வைரஸை அம்மனாக பாவித்து கொரோனா மாதா கோயில் கட்டப்பட்ட நிலையில், இரவோடு இரவாக அதனை அப்புறப்படுத்தியதால் சர்ச்சை எழுந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநில பிரதாப்கர் மாவட்டம் ஜுஹி சுகுல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா. இவர் உள்ளூர்வாசிகளிடம் தானம் பெற்று ஊரில் கொரோனா மாதா கோயிலைக் கட்டினார். ஒரு சிலை நிறுவப்பட்டு, தினசரி பூஜைக்கு ராதே ஷ்யாம் வர்மா என்பவர் பூசாரியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் முதல்நாள் பூஜையை முடித்துவிட்டு ஊருக்கு சென்றுவிட்டார். ஆனால், மறுநாள் காலையில் அங்கிருந்த சிலை அப்புறப்படுத்தப்பட்டு கோயில் இடிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக சங்கிபூர் காவல்நிலைய அதிகாரி தியாகி கூறும்போது, கோயிலை பொலிஸார் அப்புறப்படுத்தவில்லை. அது அமைந்த இடம் சர்ச்சைக்குரிய நிலம் என்பதால், சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் யாரேனும் இடித்திருக்கலாம் என்றார்.
இருப்பினும், ஒரே நாளில் கோயில் அப்புறப்படுத்தப்பட்டது கிராமவாசிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது