உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர் உயிரிழப்பு!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பள்ளி ஒழுங்கை வீதியைச் சேர்ந்த 42 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான சாலி முஹமது நளீம் என்ற சந்தேக நபரே நேற்று (04) மாலை உயிரிந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனர்.

உயிரிழந்துள்ள சந்தேகநபர் மௌலவி சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 2019.05.22 திகதி அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் தங்காலை சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்தார்.

இதன் போது குறித்த சந்தேக நபருக்கு நோய் நிலைமை ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த நவம்பா் மாதம் 23 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிசம்பா் மாதம் 5 ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தங்கி சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.

இவ்வாறு சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளதாக பொரள்ளை பொலிஸார் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளனா்.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *