உயிரிழந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாக தந்தை வாக்குமூலம்!

முல்லைத்தீவு மாவட்டம் மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் பல புதிய  தகவல்கள் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன.

கடந்த வாரம் 15 ஆம் திகதி காணாமற்போன சிறுமி, 18 ஆம் திகதி அவரது வீட்டிலிருந்து சுமார் 400 மீற்றர் தொலைவில் சடலமாக  மீட்கப்பட்டிருந்தார்.

இதேவேளை கடந்த 15 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட சிறுமி, பின்னர் காணாமற்போனதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் ஆரம்பத்தில் கூறியிருந்தனர். ஆனால் இக்கதைகள் அனைத்தும் உருவாக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் குறித்த சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது உறவு முறையான ஒருவரை சந்தேகத்தின் பேரில்  பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பின்னர் இந்த கொலைச்சம்பவம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, அக்கா ஆகியோரிடம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களின் விசாரணையின் பின்னர் சிறுமியின் தந்தை கொலை தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகளை ஒப்புதல் வாக்குமூலமாக தெரிவித்துள்ளார்.

தனது மகள்  இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய்  கருவை கலைப்பதற்கு சிறுமியை மயக்கமடைய செய்யும் நோக்கில், சிறுமிக்கு ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டதாகவும் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டதாகவும், குறித்த சிறுமியின்  கருவை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பதும் தற்போதைய விசாரணையில் தெரியவந்திருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில்,  குறித்த சிறுமியின் உடலில் நீண்ட நேரம் நீரில் ஊறிய அடையாளங்கள்  காணப்பட்டதால்,
குறித்த சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிசார், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜா, கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஜ்.சமுத்திரஜீவ மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி, இராணுவத்தினர் போன்ற பலரும் நேரடியாக சென்று சம்பவ இடத்தில் இருந்த பழைய கிணற்றினை பார்வையிட்டதோடு  குறித்த கிணற்றின் நீரை இறைத்து பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், சிறுமியின் வீட்டிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், சிறுமியின் வீட்டில் இரத்த கறைபடிந்திருந்த மேசையினை சான்றுப்பொருளாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு இதன்போது பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *