இலங்கையர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியாக பைசர் வழங்க தீர்மானம்!
இலங்கையில் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட் தடுப்பூசியின் 3ஆவது டோஸாக Pfizer தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.
இதற்காக, அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPC) 14.5 மில்லியன் Pfizer தடுப்பூசி டோஸ்களை கொள்வனவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான பூஸ்டர் (மிகை பாதுகாப்பு) டோஸாக (Booster Dose) அமெரிக்க உற்பத்தியான Pfizer-BioNTech இனை பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு வழங்கப்படும் தடுப்பூசி டோஸ் மூலம் தடுப்பூசியின் செயற்பாடு தொடர்ந்தும் நீடிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிகமாக வழங்கப்படும் தடுப்பூசி டோஸ் மூலம் நோயெதிர்ப்பு சக்தி கட்டமைப்பு தூண்டப்படுவதோடு, நோயெதிர்ப்பு திறன் தொடர்ந்தும் செயற்பாட்டில் இருக்குமென கண்டறியப்பட்டுள்ளது.
கொவிட்-19 நோய் தொடர்பான பிறபொருளை உடலுக்குள் செலுத்துவதன் மூலம் உடலில் இயற்கையாகவே உள்ள நோயெதிர்ப்பு தொகுதியில் அதற்கு எதிரான பிறபொருள் எதிரியை அல்லது நோயெதிர்ப்பு கலங்களை உருவாக்குவதே தடுப்பூசியின் செயற்பாடாகும்.