மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி!
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
14-வது ஐபிஎல் சீசனின் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரண்டாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடின.
டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக மார்க்ரம் 42 ஓட்டங்கள், ஹூடா 28 ஓட்டங்கள், ராகுல் 21 ஓட்டங்கள் சேர்த்தனர்.
மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர்களில், பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், ராகுல் சாஹர், க்ருனால் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் 136 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 137 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக சவுரப் திவாரி 45 ரன்கள் அடித்தார். அதேபோல் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 30 பந்துகளில் 40 ஓட்டங்கள் எடுத்து மும்பை அணியின் வெற்றிக்கு உதவினார்.
பஞ்சாப் கிங்க்ஸ் பந்து வீச்சாளர்களில், ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டையும், முகமது ஷமி, நாதன் எல்லிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.