அமைச்சுக்களின் செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதியமைச்சர் முன்மொழிவு!
கொரோனா தொற்று பரவல் காரணமாக அரச வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளமையின் காரணமாக அமைச்சுக்களின் செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்கள் மற்றும் திணைக்கள அதிகாரிகளின் எரிபொருள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட கொடுப்பனவுகளை இடைநிறுத்த முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ இது தொடர்பில் 8 யோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் இதுவரை ஆரம்பிக்கப்படாதுள்ள திட்டங்களை இடைநிறுத்துதல், சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் இதுவரை நிரப்பப்படாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்புகளை ஒத்திவைத்தல் ஆகிய யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும் உதவிகள் வழங்கப்படும் பட்டியலை மீளாய்வு செய்து அத்தியாவசியமாக உதவிகள் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு மாத்திரம் வழங்குதல், அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு கொடுப்பனவுகள், நலத்திட்டங்கள், உதவி அல்லது மானியங்களை வழங்குவதை நிறுத்துதல் ஆகிய யோசனைகள் முன்மொழியப்பட்டுள்ளன.
அத்துடன் அமைச்சுக்களின் விசேட முன்னுரிமைகளுடன் நேரடியாகத் தொடர்புபடாத அனைத்து வகையான திட்டங்களுக்கான செலவினங்களையும் உடனடியாக நிறுத்துதல் ஆகியன உள்ளிட்ட 8 யோசனைகள் இவ்வாறு நிதியமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.