இந்திய அணியின் அடுத்த தலைவராக கே.எல்.ராகுலை நியமிக்க பரிந்துரை!
இந்தியாவின் அடுத்த கேப்டனாக இந்த இளம் வீரரை உருவாக்கலாம் என்று வீரர் ஒருவரின் பெயரை முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சுனில் கவாஸ்கர் பரிந்துரை செய்துள்ளார்
இது குறித்து “Sports Tak”க்கு பேசிய சுனில் கவாஸ்கர் ” இந்தியாவுக்கு புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்றால் என்னைப் பொறுத்தவரை கே.எல்.ராகுல் சரியானவராக இருப்பார் என நினைக்கிறேன். அவர் மிகவும் சிறப்பாக விளையாடுகிறார். இப்போது கூட இங்கிலாந்தில் அருமையான ஆடட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் ஐபிஎல்லிலும் ஜொலிக்கிறார். மேலும் 50 ஓவர்கள் போட்டியிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அதனால் அவரை துணை கேப்டனாக நியமிக்கலாம்” என்றார்.
மேலும் பேசிய அவர் “பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து வருகிறார். அதில் தன்னுடைய தலைமைப் பண்பை நிரூபித்திருக்கிறார். மிக முக்கியமாக கேப்டன் சுமை, தன்னுடைய பேட்டிங்கை பாதிக்காத வகையில் அவர் பார்த்துக்கொள்கிறார்” என்றார் சுனில் கவாஸ்கர். கே.எல்.ராகுல் இந்தியாவுக்காக இதுவரை 40 டெஸ்ட், 38 ஒரு நாள் மற்றும் 48 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
முன்னதாக துபாயில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு டி20 கேப்டன் பதவியை விராட் கோலியிலிருந்து விலகுவதாக விராட் கோலி தெரிவித்துள்ள நிலையில் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து பல்வேறு கருத்துகள் கிரிக்கெட் உலகில் நிலவி வருகிறது.