இன்னும் 6 மாதங்களில் கொரோனா ஒழியும்!
இந்தியாவில் கொரோனா முதல் அலையில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், அடுத்த 5 மாதங்களில் பரவத் தொடங்கிய 2-ம் அலையால், 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டாலும் தடுப்பு நடடவடிக்கைகளால் உயிரிழப்புகளும் கணிசமாக குறைந்தன.
இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா 3-வது அலை தாக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து விளக்கமளித்துள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய இயக்குனர் சுஜித் சிங்,
“நாடு முழுவதும் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அதிகளவில் பாதிக்கப்பட்ட கேரளாவில் கூட சில தினங்களாக பாதிப்பு குறைந்து வருகிறது.
அடுத்த, 3 மாதங்களுக்கு தொற்று பாதிப்பு அதிகரிக்காத வகையில் கவனமுடன் செயல்பட்டால், அடுத்த 6 மாதங்களில் கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளது.
மக்கள்தொகை அதிகமுள்ள பகுதிகளில் தொற்று அதிகளவில் பரவுவதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது.
பண்டிகைகள் நெருங்கி வருவதால், இதனைத் தடுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், கொரோனா விதிகளைப் பின்பற்றுதல், பாதுகாப்பான பயணம், பொறுப்புடன் பண்டிகையை கொண்டாடுதல் ஆகியவற்றை மக்கள் பின்பற்ற வேண்டும்.
நாட்டின் 34 மாவட்டங்களில் தொற்றுப் பரவல் 10 சதவீதத்துக்கு அதிகமாகவும் 32 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதமாகவும் உள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த தொற்று பாதிப்பில் கேரளாவில் கடந்த வாரம் மட்டும் 67.79 சதவீதமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.