மழை வேண்டி தவளை மாலையுடன்
சிறுமிகள் நிர்வாண ஊர்வலம்!

எமது அண்டை நாடான இந்தியாவின் மத்திய பிரதேசம் மாநிலம் புதல்கண்ட் பகுதியில் வறட்சியான கிராமம் ஒன்றில் மழை வேண்டி சிறுமிகளை நிர்வாணமாக்கி அவர்கள் கழுத்தில் தவளையை மாலையாக கட்டிவிட்டு ஊர்வலம் அழைத்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து பொலிஸார் மற்றும் குழந்தை உரிமைகள் ஆணையம் விசாரித்து வருகின்றனர்.

அம்மாநிலத்தின் புதல்கண்ட் பிராந்தியத்தில் உள்ள தமோ மாவட்ட கிராமமொன்றில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி கண்டனத்தை பெற்றுள்ளது. 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளை இந்த சடங்கிற்காக பயன்படுத்தியுள்ளனர்.

இந்த சடங்கின் மூலம் மழைக் கடவுள் சமாதானமடைந்து மழை தருவார் என அந்த ஊர் மக்கள் நம்புகிறார்களாம். சிறுமிகள் முன்னால் செல்ல அந்த ஊர் பெண்களும் பாடல் பாடியபடி அவர்களை பின் தொடர்ந்திருக்கிறார்கள்.

கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் நின்று சிறுமிகள் உணவு தானியங்களை சேகரித்தனர். இறுதியாக அவற்றை உள்ளூர் கோவிலின் சமுதாய சமையலறைக்கு நன்கொடையாக வழங்கினர். இந்த சடங்கிற்கு சிறுமிகளின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்து உடன் பங்கேற்றதாக மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

தேசிய குழந்தை உரிமைகள் ஆணையம் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை கேட்டுள்ளது.

“இந்த நிகழ்வுக்கு எதிராக யாரும் இதுவரை புகாரளிக்கவில்லை என்றும், இருப்பினும் சிறுமிகளை கட்டாயப்படுத்தியிருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மாவட்ட எஸ்.பி., கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *