கொரோனாவுடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் சுதர்ஷனி தெரிவிப்பு!
பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்தி கொரோனா திரிபொன்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், மற்றொரு திரிபு நாட்டுக்குள் வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிலையில், மக்கள் கொரோனாவுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே வலியுறுத்தினார்.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டுவதை விடுத்து, பேதங்களை மறந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் உலகின் பெரும்பாலான நாடுகள் முடக்கப்படாமல் செயற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
எனினும் இலங்கையில் முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.