கொண்டாட்டத்தில் தலிபான்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 மக்கள் பலி!
ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய கொண்டாட்டத்தில் தாலிபான்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், குறைந்தது 17 அப்பாவி மக்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு எதிரான அமைப்பின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கடைசி மாகாணமான பஞ்சஷீர் பள்ளத்தாக்கையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக தாலிபான் தரப்பினர் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து “எல்லாம் வல்ல அல்லாஹ்வின் கிருபையால், ஆப்கானிஸ்தான் முழுவதையும் நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். பிரச்சனையாளர்கள் தோற்கடித்துவிட்டனர், பஞ்ச்ஷீர் இப்போது எங்கள் கட்டளையின் கீழ் உள்ளது” என்று ஒரு தாலிபான் தளபதி கூறினார்.
இதனை கொண்டாடும் விதமாக நேற்று, காபூலின் கிழக்கே நங்கர்ஹார் மாகாணத்தில், தாலிபான்கள் கண்டபடி வானத்தை நோக்கி துப்பாகிச்சூடு நடத்தியுள்ளனர்.
இதில், குறைந்தது 17 பேர் பலியாகியுள்ளதாகவும், 41 பேர் காயமடைந்துள்ளதாகவும் Shamshad செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டை முக்கிய தாலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் கண்டித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “காற்றில் சுடுவதைத் தவிர்க்கவும், அதற்கு பதிலாக கடவுளுக்கு நன்றி சொல்லவும். தோட்டாக்கள் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும், எனவே தேவையில்லாமல் சுட வேண்டாம்.” என பதிவிட்டுள்ளார்.