குதிரை உயிரிழந்ததால் இயக்குனர் மணிரத்னம் மீது வழக்குப் பதிவு!
படப்பிடிப்பின் போது குதிரை உயிரிழந்ததால் இயக்குனர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இயக்குனர் மணிரத்னம் தனது கனவுத் திட்டமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தைத் தற்போது இயக்கி வருகிறார். முதல் பாகத்தின் பெரும்பாலான பகுதிகள் நிறைவு பெற்றுள்ளன. படத்தில் ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட சிலர் தங்கள் பகுதிகளில் நடித்து முடித்துள்ளனர். தற்போது படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற போது ஏற்பட்ட சிறுவிபத்தில் குதிரை ஒன்று உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அதையடுத்து இயக்குனர் மணிரத்னம் மீதும் அந்தக் குதிரை உரிமையாளர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விலங்குகள் நல வாரியம் விசாரணை செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெலுங்கானா விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது