ஈரானில் கொரோனா 5ஆவது அலை ஏற்படும் வாய்ப்பு!
சீனாவின் வுஹான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு முதன் முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
பல நாடுகள் ஊரடங்கு கட்டுப்படுகளை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றன. ஆனால், டெல்டா வகை கொரோனா தற்போது உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா தொற்றால் அதிகம் பாதித்த நாடான ஈரானில் டெல்டா வகை கொரோனா தொற்று பரவியுள்ளது. அதாவது தென் மாகாணங்களில் டெல்டா வகை கொரோனா பரவியிருப்பதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஈரானின் வைரஸ் எதிர்ப்பு பணிக்குழுவினருடன் ஆலோசனை நடத்திய அதிபர் ஹசன் ரவுகானி, “டெல்டா வகை கொரோனா பரவல் காரணமாக, நாட்டில் கொரோனா ஐந்தாவது அலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது” என அச்சம் தெரிவித்துள்ளார்.
ஈரானில் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளுக்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். ஈரானில் இதுவரை 44 லட்சம் பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.