அரச நிறுவனங்கள் பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு ரூ15,350 கோடி கடன்!

அரச நிறுவனங்கள் சில இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 15,350 கோடி ரூபாவை கடனாக
செலுத்த வேண்டியுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி டி.ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார். அவ்வாறு  கடன் செலுத்த வேண்டியுள்ள நிறுவனங்களில் இலங்கை மின்சார சபையே முன்னிலையில் உள்ளதாகவும் மின்சார சபை 8,200 கோடியை கடனாக செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 5,700 கோடியை வழங்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுயாதீன மின் உற்பத்தியாளர்கள் 1200 கோடியை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்க வேண்டி உள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் மேற்படி மூன்று நிறுவனங்களில் மாத்திரம் 15,100 கோடி ரூபா அறவிடப்பட வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதனை தவிர மேலும் அரச நிறுவனங்களிடமிருந்து 2005 கோடி ரூபாவை அறவிட வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் சாதாரணமாக அந்த நிதி தொடர்பில் தீர்வு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிக கடன்களை செலுத்த வேண்டியுள்ள 03 நிறுவனங்களுக்கும் 45 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்ட போதும் அந்த கால அவகாசத்தில் அந்த நிறுவனங்கள் கடனை செலுத்தவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் அந்த நிறுவனங்கள் எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடி தொடர்பிலும் குறிப்பிட்டார். அத்துடன் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு அந்த கூட்டுத்தாபனம் வழங்க வேண்டிய நிதி தொடர்பில் தொடர்ச்சியாக ஞாபகமூட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்;

பெற்றோலிய கூட்டுத்தாபனமானது பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளது. உதாரணமாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கான மேற்படி கடன்தொகை 2019 ல் வழங்கப்பட்ட எரிபொருளுக்கானதாகும். அப்போது அந்த நிதி பெறப்பட்டிருந்தால் எம்மால் அப்போது இருந்த டொலரின் பெறுமதிக்கிணங்க கணிக்க வேண்டியிருந்திருக்கும். எனினும் அது காலதாமதமானதால் டொலரின் பெறுமதி அதிகரித்து எமக்கு பெரும் நட்டத்தை எதிர்கொள்ள நேர்ந்தது.

இந்த வருடத்தின் பெப்ரவரி மாதத்தில் மேலும் நெருக்கடிகளுக்கு மத்தியில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. பெற்றோலிய கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுள்ள நிலைமை தொடர்பில் தொடர்ந்தும் இதுபோன்று முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதையும் நாம் தெளிவுபடுத்தியிருந்தோம். குறிப்பாக 103 ரூபாவுக்கு உற்பத்தி செய்யப்படும் மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் சலுகை விலையில் 70 ரூபாய்க்கே வழங்கப்படுகிறது. அதில் மாத்திரம் 32 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது. அதேபோன்று கடற்றொழிலாளர்களுக்கும் சலுகை வழங்கப்படுகிறது. அது உற்பத்தி செலவை விட குறைவாகவே வழங்கப்படுகிறது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *