70 வயதைக் கடந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாமென எச்சரிக்கை!
70 வயதுகளைக் கடந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமென எச்சரிக்கும் இலங்கை வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன, பயணக்கட்டுப்பாடுகளால் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும் தெரிவித்தார்.
இதுத் தொடர்பில் மேலும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், பயணக்காட்டுப்பாடுகளால் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியுமெனவும், அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்ந்து வேறெந்தக் காரணங்களுக்காகவும் வீடுகளை விட்டுப் பொதுமக்கள் வெளியில் வரவேண்டாமெனவும் கோரிக்கை விடுத்தார்.
விசேடமாக 70 வயதுகளைக் கடந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாமெனவும், வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்ட அவர், நாம் ஒன்றிணைந்து சமூகமாக கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால், கொரோனா வைரஸை விரைவிலேயேக் கட்டுப்படுத்தலாமெனவும் தெரிவித்தார்.
கொரோனா வைரஸை முற்றிலும் ஒழிப்பதற்கான மருந்துகள் இதுவரையில் கண்டுப்பிடிக்கப்படவில்லை. எனவே உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டே இந்த வைரஸூக்கு எதிராகப் போராட வேண்டியுள்ளது என்றார்.
எனவே சிலருக்கு நோய் அறிகுறிகள் எதுவுமில்லாது தங்கள் உடலில் உள்ள வைரஸூக்கு எதிராகப் போராட முடியுமெனவும் கூறிய அவர், சிலருக்கு அறிகுறிகள் ஏற்பட்டு நோய் குணமடையும். சிலருக்கு இது நியுமோனியா வரைக்கும் செல்லும். சிலருக்கு இது இன்னும் தீவிரமாகச் சென்று அவர்களது உயிர்களையும் பறிக்கும் ஆபாத்து காணப்படுகிறது. இதனாலேயே இந்த வைரஸ் தொடர்பில் அதிகக் கவனஞ் செலுத்தி மக்களைத் தொடர்ந்து தெளிவுப்படுத்தி வருவதாகவும் கூறினார்.