வவுனியா உட்பட 4 மாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்கள் முடக்கம்! – இராணுவத் தளபதி அறிவிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் மஹரகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பமுனுவ கிராம சேவகர் பிரிவு, பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொன்னத்தர (585, 585ஏ) கிராம சேவகர் பிரிவுகள், தெல்தர (569, 569ஏ) கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குட்டிவில கிராம சேவகர் பிரிவும், வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்புதுக்குளம் (208ஏ) கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிப்பிட்டி பொலிஸ் பிரிவின் பல்லேகம (214ஏ), உடகம (214), புதிய நகரம் (214ஜி) ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும், பனாமுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலல்கொட (213), சூதுகல (212ஏ) மற்றும் பனாமுர (213பி) ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் மற்றும் வேவல்வத்தை பொலிஸ் பிரிவில் ரத்கம (162எப்) கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.