உலகின் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள் இடம் பிடிப்பு!

உலகில் மிகவும் மாசடைந்த 30 நகரங்களில் 22 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளதாக ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த, ஐ.கியு-ஏர் என்ற நிறுவனம் 2019 – 20ம் ஆண்டில் உலகளவில் காற்றின் தரம் பற்றி ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் உலகின் மிக மோசமாக மாசடைந்த நகரங்கள் பட்டியலில் தொடர்ந்து இந்தியா பிரதான இடம் பிடித்திருப்பதும், உலகிலேயே அதிக மாசடைந்த 30 நகரங்களில் 22 நகரங்கள் இந்தியாவில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அந்த அறிக்கையில், உலகில் மிகவும் மாசடைந்த நகரமாக, சீனாவின் ஸின்ஜியாங் நகரம் உள்ளது. இதற்கு அடுத்த ஒன்பது இடங்களை, இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள காஜியாபாத், புலந்த்ஷர், பிஸ்ரக், ஜலால்பூர், நொய்டா, கிரேடடர் நொய்டா, கான்பூர், லக்னோ ஆகிய நகரங்களும், ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாரி மற்றும் தலைநகர் டெல்லி ஆகியவை பிடித்துள்ளன.

இதைத்தவிர, உத்திரப்பிரதேசத்தில், மீரட், ஆக்ரா, முசாபர்நகர், ஹரியானா மாநிலத்தில், பரீதாபாத், ஜிண்ட், ஹிசார், பதேஹாபாத், பந்த்வாரி, குர்கான், யமுனாநகர், ரோத்தக், தருஹீரா ஆகிய நகரங்களும், பீஹாரில் முசாபர்பூரும் அதிக மாசடைந்த நகரங்களாக உள்ளன.

டெல்லியில் காற்றின் தரம் 2019-20ம் ஆண்டில் 15 சதவீதம் அதிகரித்திருந்தாலும், சர்வதேச அளவில் மிகவும் மாசடைந்த தலைநகர்களில்  அது முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் காற்று மாசுபாட்டுக்கு முக்கிய காரணங்களாக போக்குவரத்து, விறகு எரிப்பது, மின்சார உற்பத்தி, தொழிற்துறை, கட்டுமான பணிகள், குப்பைகள் மற்றும் விவசாய கழிவுகளை எரிப்பது ஆகியவை உள்ளன.

இவற்றில் முதலிடம் பிடிப்பது போக்குவரத்து தான். காற்றின் தரத்தை மேம்படுத்த பொதுப் போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதுடன் நடந்து செல்லுதல், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவற்றை ஊக்கப்படுத்த வேண்டும் என கிரீன் கியூஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *