அசாத் சாலியை கைது செய்ய தயாராகும் அரசு?
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலியை கைது செய்யுமாறு தான் குற்றப் புலனாய்வு திணைக்கத்திற்கு அறிவித்தல் பிறப்பித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
முஸ்லிம் சட்டத்தை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மாற்ற முடியாது என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பிலேயே, அசாத் சாலியை கைது செய்ய, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஷரியா சட்டத்தின் பிரகாரம், அசாத் சாலி செயற்படுவாரேயானால், அவர் சவூதி அரேபியாவிற்கு செல்ல வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அசாத் சாலி, இலங்கையில் இருக்க வேண்டும் என்றால், அவர் இலங்கை சட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில், எதிர்வரும் ஓரிரு தினங்களில் அசாத் சாலி விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு, அவரிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கின்றார்.
இந்த விசாரணைகளில், அசாத் சாலி சட்டத்திற்கு முரணாக செயற்பட்டிருப்பாரேயானால், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.