மஹிந்தவின் உறுதிமொழிக்கு இம்ரான்கான் பாராட்டு!
கொரோனா தொற்றினால் உயிரிழந்த நபர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் அளித்த உறுதிமொழியினை தாம் வரவேற்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இன்ரான் கான் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமரின் குறித்த தீர்மானத்திற்கு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தமது பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
இதன்படி, சர்வதேச சுகாதாரக் கொள்கைகளுக்கமையவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இலங்கை சாதகமான தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிஸ் தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை சிறைச்சாலைகளில் அரசியல் குற்றச்சாட்டுக்களை மையப்படுத்தி எவரும் சிறைப்படுத்தப்படவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் குற்றவியல் சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களின் கீழ் மாத்திரமே கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்,
எனினும் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் தற்போது கருத்துரைக்க முடியாது எனவும் அது தேசியப் பாதுகாப்பு தொடர்பான விடயம் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்,