உத்தியோகப்பூர்வமாக எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் விமான நிலையங்கள் திறப்பு!

சுகாதார வழிக்காட்டல்களுக்கு அமைய எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் உத்தியோகப்பூர்வமாக விமான நிலையங்கள் திறக்கப்படவுள்ளது.

குறிப்பாக சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுமார் 10 மாதங்களுக்கு பிறகு கட்டுநாயக்க மற்றும் மத்தல விமான நிலையங்கள் வணிக விமான சேவைகளுக்கு திறக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனவரி 23 ஆம் திகதியாகும் போது வணிக விமான போக்குவரத்துக்கள் சிறிது சிறிதாக வழமைக்கு திரும்பும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சுற்றுலா பயணிகளுக்காக நாட்டை திறப்பது குறித்து தெளிவுப்படுத்தும் வகையில் இன்று (05) முற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.
விமான நிலையம் திறக்கப்பட்டதன் பின்னர் சுற்றுலா பயணிகளை அழைத்துவரும் நிறுவனங்கள் கட்டாயம் சுகாதார வழிகாட்டல்களை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த சுகாதார வழிமுறைகளை உரிய முறையில் கடைபிடிக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு பயணிகளை அழைத்துவர அனுமதி வழங்கப்படாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

´மார்ச் 19 ஆம் திகதி விமான நிலையங்கள் மூடப்பட்டன. அன்றில் இருந்து நாட்டுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை. சுற்றுலாத்துறையை கட்டியெழுப்ப கடந்த ஜூன் மாதம் முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது சுற்றுலாத்துறைக்கு பயணிகள் மத்தியில் நல்ல கேள்வி நிலவுகின்றது. அதனால் ஜனவரி 23 ஆம் திகதியாகும் போது விமான நிலையங்களை திறக்க உள்ளோம். தற்போது விமான நிலையங்களை மீள திறப்பதற்குள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம்´ என்றார்.

கொவிட் தொற்று காரணமாக சுற்றுலாத்துறையை நம்பி வாழும் 30 இலட்சத்துக்கும் அதிகமானார் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *