தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்க மறுப்பு!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
எனினும், சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார் எனவும் அவர் கூறியுள்ளார்.
” பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இவ்விவகாரம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் தீர்வு எட்டப்படவில்லை. இம்மாதத்துக்குள் முடிவொன்றை எடுப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்.” – என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுக்கப்படும் என்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபா வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்திவருகின்றனர். இது பற்றி அரச தரப்பில் இருந்தோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க தரப்புகளில் இருந்தோ இன்னும் உரிய விளக்கம் வழங்கப்படவில்லை.