வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புரெவி புயலாக உருவானது!

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், புரெவி புயலாக உருவானது. வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று உருவானது. தென் கிழக்கு, தென் மேற்கு வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டது.

இந்நிலையில், வங்ககடலில் நிலை கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புரெவி புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை திருகோணமலை அருகே 400 கி.மீ. தொலைவில் கிழக்கு மற்றும் தென்கிழக்கில் புரெவி புயல் நிலைக்கொண்டுள்ளது. புயல் 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ச்சியாக நாளை 2-ம் திகதி திருகோணமலையை கடக்கிறது. அதன் தொடர்ச்சியாக 4-ம் திகதி கன்னியாகுமரி-பாம்பன் இடையே புரெவி புயல் கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

புரெவி புயல் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய கூடும் என்றும், காற்றும் வேகமாக வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. குமரி மாவட்டத்தை பொறுத்தவரை இந்த புயலால் பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும் பணியில் அனைத்து துறையை சேர்ந்த அதிகாரிகளும் உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். குமரி மாவட்டத்தில் உள்ள 134 தீயணைப்பு வீரர்கள் தவிர மதுரை, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் வரவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *