இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா!
பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியில் கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீனா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் குறித்து அவதானமாக இருக்குமாறும் அவற்றை தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்குமாறும் அதிகாரிகளை சீன அரசு எச்சரித்துள்ளது.
அத்துடன் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களை நன்கு சமைத்தே உண்ண வேண்டும் எனவும் சீனா அறிவுறுத்தியுள்ளது.
பிரேசிலில் இருந்து இந்த சென்ஷென் நகரில் இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியிலே கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து எந்தப் பெட்டகத்தில் வந்த கோழி இறைச்சியில் கொரோனா உறுதியானது என்று அதிகாரிகள் ஆய்வு செய்து கண்டறிந்தனர். எனினும் ஏனைய இறைச்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது அவற்றில் தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
கடந்த புதன் கிழமை ஈக்வடார் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறாலில் கொரோனா வைரஸ் இருந்ததாக சீனா அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் மிகக் குறைந்த தட்ப வெப்ப நிலையில் நீண்ட காலம் உயிர்வாழும் தன்மை கொண்டது என ஆய்வாளா்கள் ஏற்கனவே எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.