ஊரடங்கால் உடைந்து போன குடும்பம்!
எனக்கு என் கணவனிடமிருந்து விவாகரத்து வேண்டும் . பெற்றுக்கொள்ள உதவி செய்ய முடியுமா ?”
என்ற கேள்வியோடுதான் அந்தப் பெண் எனக்கு அறிமுகமானார் . அவர் யாரென்று எனக்குத் தெரியாது . தெரிந்து கொண்டபோது இடிந்து போனேன் .
அவருக்கு இரண்டு குழந்தைகள் . ஐந்து வயதில் ஒரு ஆண் குழந்தை; இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை . பெண் குழந்தை பிறக்கும்போதே மூளைச் சிதைவு ஏற்பட்டிருக்கிறது . அதனால், அந்தக் குழந்தைக்கு காது கேட்பதில்லை ; வாய் பேச முடியாது ; பார்வைக் குறைபாடும் இருந்தது . கைகால்கள் இரண்டும் செயலிழந்து காணப்பட்டன . குழந்தைக்கு முழுநேர பராமரிப்பு தேவை என்பதால் தொழிலை விட்டுவிட்டார் . கணவனும் பிரிந்து விட்டார். இந்த
நிலையில்தான் மற்றுமொரு அதிர்ச்சி
அவருக்கு காத்திருந்தது. அவர் புற்றுநோயின் கடைசிக்கட்டத்தில்
இருப்பதாகவும் அவரது ஆயுட்காலம்
ஒரு வருடத்துக்குமேல் தாங்காது
என்றும் வைத்தியர்கள் தீர்ப்புக்கூறி
விட்டனர் . குழந்தைக்கு வைத்தியம்
பார்ப்பதா , தனக்குரிய சிகிச்சையை
தொடருவதா … என்ற வாழ்க்கைப்
போராட்டத்தில் அவர் சிக்குண்டு தவித்தவேளை குழந்தைக்கு வலிப்பும்
வர தொடங்கி விட்டது. அவரது
பெற்றோர், உறவினர்கள் எல்லோரும் வெளிநாட்டில் இருந்ததால் அவர்
தனிமையில் போராடினார் . இதையறிந்த பெற்றோர் மகளைப் பார்க்க வருவதற்காகத் துடித்தனர் ; நினைத்த மாத்திரத்தில் வரமுடியுமா ? விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருந்தனர் . அதற்கிடையில்
அவருக்கு உதவி செய்வதற்காக சில சகோதரிகள் முன்வந்தனர்.
யார் அவரை சிகிச்சைக்கு
அழைத்து செல்வது, அதுவரை பிள்ளைகளை யார் பராமரிப்பது, இரவு நேரத்தில் அவருடன் யார்
தங்குவது என்றெல்லாம் திட்டம்
தீட்டி உதவியை ஆரம்பித்த கொஞ்ச
நாட்களில் கொரோனா தன் கொடுங்கோல் ஆட்சியை இங்கு
ஆரம்பித்திருந்தது . அவரது
பெற்றோருக்கு விசா
கிடைத்தது . ஆனால் , பயணத்தை ஆரம்பிக்க முன்னரே விமானச் சேவைகள் யாவும் ரத்துச் செய்யப்பட்டு
எல்லைகள் மூடப்பட்டன . சமூக இடைவெளியைப் பேணவேண்டிய
நிலையில், அவருக்கு உதவி
செய்வதற்காக ஒவ்வொருநாளும்
போய் வருவது இலகுவான காரியமாகப் படவில்லை. ..நோன்பு காலம் என்பதால் சிரமங்கள் சின்னதாகத் தெரியவில்லை. இருந்தாலும் முற்றுமுழுதாக யாரும்
அவரைக் கைவிடவில்லை . நோன்புப்
பெருநாளுக்கு முதல் நாள் , ஒரு
சகோதரி அந்தப் பெண்ணையும், அவரது குழந்தையையும் தன் வீட்டுக்கு
அழைத்து வருகிறார் . பெருநாளன்று
தனியே இருக்க வேண்டாம் என்று …!
பெருநாளன்று அதிகாலையிலேயே அவர் உயிர் பிரிந்த செய்தியில் துண்டு துண்டாக நொறுங்கிப்போனேன் .
வெளிநாட்டில் தனியான வாழ்க்கை , ஆட்கொல்லி நோயுடனான போராட்டம் , ஊனமுற்ற ஒரு பெண் குழந்தை , பெற்றோரின் அருகாமை
இல்லாமை , ஏன் உயிர் பிரியும் தருவாயில் ஒரு மஹ்ரமான உறவுகூட பக்கத்தில் இல்லை. …
அவர் வாழ்க்கையோடு உங்கள்
பிரச்சினைகளை ஒப்பிட்டுப்பாருங்கள்.
ஒரு பெரிய கோட்டுக்குப் பக்கத்தில்
ஒரு சிறிய கோடு வரைந்ததுபோல்
உங்கள் பிரச்சினைகள் அற்பமாகத்
தெரியும் . ..
அடுத்த தெருவில் அமாவாசையைக் காணும்வரை நம் வீட்டுக்குள் இருக்கும் ஒளிக்கீற்றுக்களின் பெறுமதி புரியாது .
நமது அருட்கொடைக்குகளுக்கு நன்றி சொல்லப் பழகிக் கொள்வோம் .