எனது ஆட்சியில் ஏற்பட்ட நெருக்கடி இந்த ஆட்சியில் ஏற்படக் கூடாது
நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பு இன்றியே பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நான் செயற்படவேண்டியேற்பட்டது. இதன் காரணமாகவே அரசுக்குள்ளும் நாட்டிலும் பிரச்சினைகள் உருவெடுத்தன.”
– இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:-
“நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு நாட்டால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது. ஜனாதிபதி பதவியை வகிப்பவருக்கு நாடாளுமன்றத்தின் ஆதரவு கட்டாயம் கிடைக்கவேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் ‘கொரோனா’ பிரச்சினைக்கு முக்கியத்துவம் வழங்கிய சுகாதாரத் தரப்பினரின் வழிகாட்டலுடன் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டு புதிய நாடாளுமன்றம் கூட்டப்படவேண்டும்.
நாடாளுமன்றச் செயற்பாடுகள் தொடர்ந்தும் ஒத்திவைக்கப்படுமானால் அது நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியாகப் பொதுத்தேர்தலில் இணைந்து போட்டியிட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெறுவதே எமது எதிர்பார்ப்பாகும்.
ஐந்தாண்டுகள் வரை ஜனாதிபதியாகப் பதவி வகித்தேன். எனினும், பெரும்பாலான காலப்பகுதியில் நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பு இன்றியே செயற்பட வேண்டியேற்பட்டது. இதனால் அரசுக்குள்ளும் நாட்டிலும் பிரச்சினைகள் ஏற்பட்டன. எனவே, ஜனாதிபதி முன்னோக்கிப் பயணிக்க புதிய நாடாளுமன்றம் அவசியம். அதற்காக சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தேர்தல் நடத்தப்பட வேண்டும்” – என்றார்.