வரக்காபொலவில் விபத்து ஒருவர் பலி 29 பேர் காயம்
வரக்காபொல நகர பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 29ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
வரக்காபொலவிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறி வகைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்றும், கொழும்பிலிருந்து, தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலை சம்பூர் பகுதியை நோக்கி ஆட்களை ஏற்றிச் சென்ற கடற்படையின் பஸ்சும் நேருக்கு நேர் மோதுண்டதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார். காயமடைந்தவர்களில் மூவர் கடற்படை வீரர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் அணைவரும் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தினை அடுத்து, தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக அழைத்துசெல்லப்பட்ட மூவர் தப்பியோடியுள்ளதாகவும் அவர்களில் இருவர் பின்னர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்