உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் முன்னாள் ஜனாதிபதி சிக்கலில்
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல் பற்றிய விசாரணைகளில் முன்னாள் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை சட்டமா அதிபர் திணைக்களத்தை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இன்று வெளியிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் இதுவரை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகிய இருவர் மீது மட்டுமே சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் இலங்கை ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவிடம் இதுவரை ஈஸ்டர் தாக்குதல் பற்றிய விசாரணை நடத்தும் சிறீலங்கா அதிபர் ஆணைக்குழு வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்துகொண்டிருக்கின்றது.
இதேவேளை, முன்னாள் இலங்கை ஜனாதிபதி சிறிசேன, எதிர்வரும் பொதுத் தேர்தலில்ண பொதுஜன முன்னணியின் கீழ் பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
அதோடு மைத்திரிபால சிறிசேன சுதந்திரக் கட்சி மற்றும் மொட்டுக் கட்சியின் கூட்டணியில் பதில் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்