மகளின் புர்கா விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஏ ஆர் ரஹ்மான்
தன்னுடைய மகள் கதிஜாவின் புர்கா விவகாரம் குறித்து முதன்முறையாக பதிலளித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.
ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா முகத்தை முழுவதுமாக மறைத்தபடி புர்கா அணிந்திருந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியது.
சமீபத்தில் கூட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் குறித்த படத்தை பதிவிட்டு, எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் அவரது மகளைப் பார்க்குப் போது எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல் உள்ளது. பாரம்பரியமிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுவது வேதனையாக இருக்கிறது” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த கதிஜா, நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும் போது, மக்கள் ஒரு பெண் என்ன ஆடையை அணிய வேண்டும் என்பதில் கவனத்தை செலுத்துகின்றனர்.
கடந்த ஒரு வருடமாகவே இந்த பிரச்சனை சுற்றிக் கொண்டிருக்கிறது, என்னுடைய வாழ்க்கையில் நான் எடுத்த முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன்.
நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நன்றி. என்னுடைய பணிகள் மட்டுமே பேசும். மேற்படி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.
அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உண்மையான பெண்ணியம் என்றால் என்னவென்று கூகுள் செய்து பார்க்கவும். அது மற்ற பெண்களைத் தரக்குறைவாக பேசுவதும், அவரது தந்தை பெயரை இணைத்துப் பேசுவதும் அல்ல என பதிலளித்தார்.
இந்நிலையில் இதுகுறித்து ரஹ்மான், பிள்ளைகளுக்கான சுதந்திரத்தை நான் கொடுத்திருக்கிறேன். அதில் கதிஜா தேவையானதை செய்து கொள்கிறார்.
இப்பதிவை கதிஜா சமூகவலைதளத்தில் பதிவிடுவதற்கு முன் என்னைக் கேட்கவில்லை. அதன் பின்னரே நான் பதிவிட்டேன். இது அவரது விருப்பம்.
ஆண்கள் புர்கா அணியலாம் என்றிருந்தால் நான் கூட புர்கா அணிவேன். ஏனெனில் மிக எளிதாக வெளியில் செல்லலாம். கதிஜா தனது சுதந்திரத்திற்காக புர்கா அணிந்திருக்கலாம்” என்றார்.